திருச்சி: ஜல்லிக்கட்டு அனைத்துலக விளையாட்டாக அங்கீகாரம் பெற வேண்டும் என்று இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் சூரியூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட அவர் நேரில் வந்திருந்தார். அரசு சட்ட திட்டங்களுடன் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றதாக அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் தம்முடைய காளையும் கலந்து கொண்டு வெற்றி பெற்றதாக தெரிவித்த ஆளுநர் செந்தில் தொண்டமான் சூரியூர் ஜல்லிக்கட்டும் உலகப்புகழ் பெற்றது என்றார்.
ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அண்மையில் இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
“கடல் கடந்து போட்டி நடத்தப்படும்போது குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்துலக அங்கீகாரம் பெறும். இந்நோக்கத்துடன் இலங்கையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்துலக விளையாட்டாக உருவாக்க ஜல்லிக்கட்டு சங்கத்துடன் இணைந்து செயல்படுவோம்.
“இலங்கையில் ஜல்லிக்கட்டுக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு இருந்தது,” என்றார் ஆளுநர் செந்தில் தொண்டமான்.