சென்னை: தமிழக அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் அனைவரும் பங்கேற்றுப் பயனடைய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
பன்னாட்டு புத்தகத் திருவிழாவை தமது சமூக ஊடகப்பதிவில் அறிவுத் திருவிழா என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க அரசு முன்னெடுக்கும் அறிவியக்கத்திற்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முதல் சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருவதாக முதல்வர் கூறியுள்ளார்.
நடப்பு ஆண்டில் 40 உலக நாடுகள், 10 இந்திய மாநிலங்களின் பங்கேற்புடன் 50 மொழிகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 18ஆம் தேதி வரை (இன்று) நடைபெற உள்ளது.
இம்முறை தொழிற்கல்வி சார்ந்த 200 நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. பல்வேறு கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெறுகின்றன.
எழுத்தாளர்களுக்கும் வெளிநாட்டு பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட 20 இலக்கிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்ப் படைப்பாளிகள் உலகெங்கும் சென்று சேரவும், உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வத்தை தமிழில் அளிக்கவும், பெரும் பொருள்செலவில் தமிழக அரசு முன்னெடுக்கும் விழா இது. இந்த உலக அளவிலான அறிவுத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயனடைய வேண்டும்,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

