புதுக்கோட்டை: “இலங்கை கடற்படையினரால் அடிக்கடி இன்னல்களுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
“அதற்காக இலங்கை மற்றும் தமிழக அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாட்டை செய்வேன்,” என்று இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை வடமலாப்பூர் மஞ்சுவிரட்டு நிகழ்வைப் பார்க்க வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மஞ்சுவிரட்டுப் போட்டியை அனைத்துலக விளையாட்டுகளில் இடம்பெறச் செய்யும் நோக்கத்தில் இலங்கையில் முதல்முறையாக நடத்தி முடித்திருக்கிறோம். வடமலாப்பூர் மக்களின் அழைப்பை ஏற்று இப்போது இங்கு வந்திருக்கிறேன்,” என்று கூறினார்.
“மீன்வளத்தில் எல்லை என்பதை நிர்ணயம் செய்ய முடியாது. தமிழக மீனவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். இலங்கை மீனவர்களும் இங்கே கைது செய்யப்படுகிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் அவ்வப்போது விடுதலையும் செய்யப்படுகிறார்கள்.
“இந்தப் பிரச்சினையில் சுமுகத் தீர்வு காண்பதற்கு தமிழக மற்றும் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வேன்,” என்று செந்தில் தொண்டைமான் உறுதியளித்துள்ளார்.