சென்னை: திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்து வருகிறார்.
இந்நிலையில், இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து சனிக்கிழமை மாலை விமானம் மூலம் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சேலம் சென்றனர்.
மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கு பெற உள்ளதால் சேலம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதிலும் இருந்து ஏற்கெனவே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சுற்றுப்பயணமாக வந்த 1,500 பேரின் இருசக்கர வாகனங்கள் மாநாட்டுத் திடலுக்கு வருகிறது.
இதனைத் தொடர்ந்து மாநாட்டு திடல் அருகில் ஒரு மணி நேரம் 1,000 ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு ‘ட்ரோன் ஷோ’ நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.