வன்கொடுமை செய்தவர்களுக்கு பாதுகாப்பளிப்பவர்கள் மீதும் வழக்கு தொடரவேண்டும்

2 mins read
b0f9e275-4770-4714-9e48-8574d3699722
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: திமுக சட்டப் பேரவை உறுப்பினர் மகன் வீட்டில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவியை வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் மீது மட்டுமின்றி, அதுபோன்றவர்களுக்கு பாதுகாப்பளிப்பவர்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது குற்றம்சாட்டி அந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பல்லாவரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி என்பவரின் மகன் ஆன்டோ மதிவாணன் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருநருங்குன்றம் என்னும் சிற்றூரைச் சேர்ந்த ரேகா பட்டியல் சமுதாயச் சிறுமி. அவர் அந்த வீட்டில் கடந்த 8 மாதங்களாக தாங்க முடியாத வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

மாணவி ரேகா மீது ஆன்டடோ மதிவாணனின் மனைவி மெர்லின் என்பவர் உடல் முழுதும் காயங்கள் ஏற்படும் வகையில் சூடு வைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். இது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை கண்டிக்கத்தக்கது, மன்னிக்க முடியாதது.

ஏழை மாணவி ரேகா, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற அவரது கனவுடன் 12ஆம் வகுப்பில் நல்ல தேர்ச்சி பெற்றார். மேற்படிப்புச் செலவுக்குப் பணம் சேர்ப்பதற்காக ஆன்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஆனால் அங்கு, அவரிடம் 16 மணி நேரம் வேலை வாங்கியிருக்கின்றனர். அதற்காக ஊதியம் எதுவும் அந்தச் சிறுமிக்கு வழங்கப்படவில்லை. அத்துடன் அடிக்கடி அடித்தும் உதைத்தும் துன்புறுத்தப் பட்டிருக்கிறார்.

மாணவி ரேகாவை கொடுமைகளுக்கு உள்ளாக்கிய ஆன்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லின் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தோர் ஆகியோர் மீது நீண்ட இழுபறிக்குப் பிறகு தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், அதன் மீது தொடர் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய அனைத்து திரைமறைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்புவதற்கு தமிழக அரசும், காவல்துறையும் அனுமதிக்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்