காஞ்சிபுரம்: அயோத்திக்கும், காஞ்சிபுரத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து புராணம் ஒன்றில் குறிப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், அயோத்தி ராமர் கோயில் தொடக்க விழா நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் மண்டபத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.
இதையொட்டி காலை 8 மணி முதல் கம்பராமாயணம் சொற்பொழிவு, கீர்த்தனைகள் உள்ளிட்டவை இடம்பெறும். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ராமர் குறித்த இசைப் பாடல் நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகர ஆன்மிக பேரவை இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜனவரி 21ஆம் தேதி மதுராந்தகம் வருகிறார். அங்கு ஏரிகாத்த ராமர் கோயிலில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்பின்னர் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள மடத்துக்குச் சென்று, பின்பு வரதராஜ பெருமாள் கோயிலில் வழிபாடு செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது.