மதுரை: மதுரை மாவட்டம், கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 24ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
அன்றைய தினம் இம்மைதானத்தில் 9,000 காளைகளும் 3,300 வீரர்களும் களம் காண பதிவு செய்துள்ளனர்.
அலங்காநல்லுார் அருகே ரூ.45 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜனவரி 24 முதல் 28 வரை 5 நாள்களுக்கு போட்டிகள் நடத்தப்படும் என முன்னதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மைதானத் திறப்பு விழா நாளன்று மட்டும் போட்டியை நடத்த முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் முன்னிலையில் நடக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9,000 காளைகளும் 3,300 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், 1,200 காளைகளும் 600 வீரர்களும் மட்டுமே போட்டியில் பங்கேற்கும் சூழல் உள்ளது என்றும் போட்டிகளைக்கூட தொடர்ந்து 5 நாட்களுக்கு நடத்தாமல், திறப்பு விழா அன்று மட்டுமே நடத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.