அவினாசி: திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு ஒன்பது நாட்கள் நிலாவுக்கு சோறு படைத்து பெண்களும் சிறுவர்களும் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி கொடியேற்ற நாளில் (ஜனவரி 19ஆம் தேதி) இருந்து நடைபெற்று வருகிறது.
ஊரின் நடுவே உள்ள பொது இடத்தில் வண்ணக் கோலமிட்டு கோலத்தின் நடுவே சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, பிள்ளையாரின் தலையில் அருகம்புல், வெள்ளை எருக்கலம் பூ வைத்து, அலங்கரித்து நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது.
பின்னர் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பிள்ளையாரை பாவித்து, நிலாவை பூமிக்கு அழைக்கும் விதமாக பெண்கள் வட்டமாக நின்று தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஆடி, பாடி கும்மியடித்தனர்.