சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் தமிழக மக்களின் நலனிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி எத்தகைய சமரசத்துக்கும் இடம் கொடுக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சித் தலைவர் கமல்ஹாசனின் சிந்தனைகளோடும் கொள்கைகளோடும் ஒத்துப்போகும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும் மநீம திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு, செயற் குழுக் கூட்டம், சென்னையில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்சி அறிவித்துள்ள இரண்டு நிபந்தனைகளை ஏற்காத கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள நாற்பது தொகுதிகளிலும் போட்டியிட மநீம தயங்காது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், ‘கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். தேர்தல் பணிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என கமல் அறிவுறுத்தி உள்ளதாகவும் கட்சியினர் கூறியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கி உள்ளன.