திருவண்ணாமலை: பாகிஸ்தானில் பிறந்த தாராகவுரி என்ற 85 வயது மாது திருவண்ணாமலையில் உள்ள சிம்மதீர்த்தம் பகுதியில் வசித்து வந்தார்.
இவர் நோபு என்ற நாய் ஒன்றை பாசத்துடன் குழந்தையைபோல் வளர்த்து வந்தார். இந்த நிலையில் தாராகவுரி நேற்று முன்தினம் காலையில் வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார்.
அடக்கம் செய்ய யாரும் இல்லாத நிலையிலும் சடங்கு முறைகள் தெரியாததாலும் உடன் வசித்த உறவினர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் சமூக சேவகரான மணிமாறனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு சென்று உடலுக்கு இறுதி சடங்குகள் செய்தார்.
இந்த நிகழ்வின்போது தாராகவுரியை விட்டுப் பிரிய மனமில்லாத வளர்ப்பு நாய் அவரின் உடலை சுற்றி சுற்றி வந்தது. மேலும் உடல் மீது படுத்துக்கொண்டு, அவரை எழுப்ப முயன்றது.
தகனம் செய்ய சடலத்தைக்கொண்டு செல்ல முற்பட்டபோது அதை எடுக்கவிடவில்லை. தொடர்ந்து உடலை வாகனத்தில் ஏற்றும்போது அந்த வாகனத்தில் நாயும் ஏறிக்கொண்டது.
அப்போதும் அந்த பெண்ணின் உடலை சுற்றி வாலை ஆட்டிக்கொண்டே தவித்தது. இதையடுத்து அவரின் உடல் எமலிங்கம் அருகே உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.
தன்னை வளர்த்த எஜமானிக்கு கடைசிவரை அந்த நாய் நன்றியுடன் வாலாட்டியது பலரையும் நெகிழச் செய்தது.