விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பலியான சம்பவம் விருதுநகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி அருகே உள்ள தம்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு விருதுநகரில் பட்டாசு ஆலை உள்ளது. அங்கு 25 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணி நாள்தோறும் நடந்து வந்தது.
ஜனவரி 24ஆம் தேதியும் ஆலையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் முப்பது பேர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓர் அறையில் வெடி பொருள்கள் உரசிக் கொண்டதில் திடீரென தீப்பற்றியது.
மேலும் அந்த அறையில் இருந்த சில பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், அடுத்தடுத்த அறைகளில் உள்ள பட்டாசுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெடிக்கத் தொடங்கின. இதையடுத்து ஆலையில் உள்ள அறைகள் சில இடிந்து விழுந்தன.
வெடி விபத்து ஏற்பட்ட அறையில் மருந்து கலவை செய்து கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த சில தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.