சென்னை: பணிப்பெண்ணை கடுமையாக தாக்கி துன்புறுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பிப்ரவரி 1ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.
“எம்எல்ஏ கருணாநிதியின் மகனும் மருமகளும் வீட்டு வேலைகளை செய்வதற்கென்று, கொத்தடிமை போல தன்னை அழைத்துச் சென்று சித்ரவதை செய்த கொடூரத்தை அந்த மாணவி ஒரு காணொளிப் பதிவின் மூலம் விவரித்த காட்சிகள் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகி, மனிதாபிமானமுள்ள அனைத்து மக்களின் மனசாட்சியையும் உலுக்கி இருக்கிறது,” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.