சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக குழுவுக்கு அக்கட்சியின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு தலைமையேற்றுள்ளார்.
தமிழகம், புதுவையில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை திமுக ஒதுக்க உள்ளது என்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இம்முறை அதைவிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க திமுக குழுவிடம் வலியுறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
எனினும், பத்துக்கும் குறைவான தொகுதிகளை மட்டுமே ஒதுக்குவது என திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
திமுக கூட்டணியில் ஆகப்பெரிய கூட்டணிக் கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, அதிமுகவில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் குழுக்கள் ஜனவரி 25ஆம் தேதி (இன்று) முதற்கட்ட ஆலோசனையை நடத்த உள்ளன.
தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகளைக் கவனித்தல் ஆகியவற்றுக்காக நான்கு குழுக்களை அதிமுக அமைத்துள்ளது.