சென்னை: நடிகர் விஜய் தனது தலைமையிலான மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையடுத்து, தொகுதிகள் தோறும் ‘பூத் கமிட்டி’ அமைப்பது குறித்து அவர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது. அண்மைக்காலமாக தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் நடிகர் விஜய்.
அண்மையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உதவித் தொகையும் நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டன.
விஜய் தன் கையால் அவற்றை வழங்கினார். எனவே, விஜய் மிக விரைவில் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 25ஆம் தேதி வியாழக்கிழமை தேர்தல் தொடர்பாக விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் தமிழ்நாடு மட்டும் அல்லாமல், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுவை மாநிலங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது ஏதேனும் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த திடீர் ஆலோசனையை அடுத்து விஜய்யின் அரசியல் பிரவேசம் விரைவில் நிகழும் என எதிர்ப்பார்க்க முடிகிறது என அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். இது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.