சென்னை: 17 வயதுச் சிறுமியை அடித்து சித்திரவதை செய்த வழக்குத் தொடர்பில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த திமுக எம்எல்ஏவின் மகன், மருமகளைத் தனிப்படை காவலர்கள் வியாழக்கிழமை ஆந்திராவில் கைது செய்தனர்.
அவர்களை அங்கிருந்து வெள்ளிக்கிழமை காலை சென்னைக்கு அழைத்து வந்து, சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி முன் முன்னிலைப்படுத்தினர். அப்போது, ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினாவை பிப்ரவரி 9ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரேகா என்ற 17 வயதுச் சிறுமி, பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஆகிய இருவர் மீதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.
தனக்கு பேசியபடி சம்பளம் கொடுக்கவில்லை என்றும் தன்னைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கியதுடன் அடித்துத் தாக்கி, சூடு வைத்து கொடுமைப்படுத்தினர் என்றும் ரேகா அதிர்ச்சியூட்டும் வகையில் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே, சிறுமி பேசியிருந்த காணொளி உரையாடலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பலரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ரேகாவின் புகாரை அடுத்து, திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வன்கொடுமைச் சட்டம், ஆபாசமாக பேசுவது, தாக்கியது உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் ஆண்ட்ரோ மதிவாணன், அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.
தனிப்படை காவலர்களின் தேடுதல் வேட்டையில் ஆந்திராவில் சிக்கிய குற்றவாளிகள் இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.