சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது காலம் கடந்து அறிவிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.
விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதையொட்டி, அவரது குடும்பத்தினரை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
அப்போது,விஜயகாந்த் சினிமாவிலும், அரசியலிலும் அளித்த பங்களிப்புக்காக பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது என்றும் அதற்குப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.
பிரேமலதா பேசும்போது, ‘‘ காலம் கடந்து, காலன் எடுத்துச் சென்றபிறகு விஜயகாந்துக்கு இவ்விருது கிடைத்துள்ளது. அவர் உயிரோடு இருக்கும்போது இவ்விருது கிடைத்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியுடன் இவ்விருதை ஏற்றுக் கொண்டிருப்போம். எனினும், இவ்விருதுக்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விருதை விஜயகாந்த் மீது அன்பு கொண்ட அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.