இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்தவர் கண்ணன். அவருடைய மகன் ஆப்பிரிக்காவில் மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரின் வேலை ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் கண்ணன் இணையம் மூலம் அவருக்கு வேறு வேலைத் தேடினார்.
அப்போது கனடா நாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை இருப்பதாக இணையத்தில் சிலர் தெரிவித்தனர். வேலை ஒப்பந்த பத்திரம், விசா, கடப்பிதழ் ஆகிய அனைத்தும் வீட்டுக்கே நேரடியாக வந்து வழங்கப்படும் என கண்ணனிடம் அவர்கள் கூறினர்.
அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பிய கண்ணன் மோசடிக்காரர்களின் வங்கி கணக்குகளுக்கு ரூபாய் 14 லட்சத்தைப் பல தவணைகளில் செலுத்தினார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு மோசடிக்காரர்களின் தொலைபேசி எண்கள் துண்டிக்கப்பட்டன. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணன் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.