சேலம்: சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் தன் மகனான 30 வயது ரிஷிகேஷ்வரனுடன் சேர்ந்து நோட்டு புத்தகங்களுக்கு ஒட்டப்படும் ரசாயனம் தயாரிக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வெங்கடேஸ்வரனின் மனைவி நிர்மலா அவரது உறவினரைப் பார்ப்பதற்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பியபோது, தனது 23 வயது மகள் பூஜா கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பூஜாவுக்கு அருகே விட்டத்தில் உள்ள இரும்புக் கம்பியில் வேட்டி, சேலையில் வெங்கடேஸ்வரனும், ரிஷி கேசவனும் துாக்கில் தொங்கியபடி பிணமாகக் கிடந்தனர்.
மூவரையும் பிணமாகக் கண்ட நிர்மலா அலறி துடித்தார். அவரது சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மூவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
அம்மாபேட்டை காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் சுமையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
இருப்பினும் மூவரின் இறப்பிலும் மர்மம் நீடிப்பதால் காவல்துறை தொடர்ந்து அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.