புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வந்த முதல்கட்ட அகழாய்வுப் பணி முடிவுக்கு வந்துள்ளதாக தமிழக தொல்பொருள் துறை தெரிவித்துள்ளது.
அங்கு அடுத்தகட்ட ஆய்வையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என தொல்பொருள் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து அரசு உரிய அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீழடிக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில், சங்ககாலப் பகுதியாக விளங்கும் பொற்பனைக் கோட்டையில் தொல்லியல் துறை சார்பில் கடந்த ஆண்டு மே மாதம் அகழாய்வுப் பணி தொடங்கியது.
அரண்மனைத் திடல் என்று அழைக்கப்படும் கோட்டையின் மையத்திலும் கோட்டைச் சுவரின் வடக்குப் பகுதியிலும் 15 அடி நீளமுள்ள குழிகள் ஆய்வுக்காகத் தோண்டப்பட்டன.
அப்போது செங்கல் கட்டுமானம், பானை ஓடுகள், வட்ட வடிவிலான சுவர், கண்ணாடி மணிகள், வட்ட சில்லுகள், பச்சைக் கல் மணிகள், படிகக் கல் மணிகள், தங்க மூக்குத்தி, சுடுமண் விளக்கு, தக்களிகள், எலும்பு முனைக் கருவி, முக்கோண வடிவ செங்கற் கட்டி, மஞ்சள் கல் மணி உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கண் டெடுக்கப்பட்டதாக அகழாய்வுப் பணிக்கான இயக்குநர் தங்கதுரை தெரிவித்தார்.
ஆய்வின்போது சேகரிக்கப்பட்ட பொருள்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றும் இத்துடன் முதற்கட்ட ஆய்வு முடிவுக்கு வரும் என்றும் தங்கதுரை கூறினார்.
மாநிலம் முழுவதும் எட்டு வெவ்வேறு இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக தோண்டப்பட்ட குழிகளில் சிலவற்றை தார்ப்பாய் கொண்டு தற்காலிகமாக மூடியுள்ளனர். அவற்றில் மீண்டும் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்படுமா எனத் தெரியவில்லை.