விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிப்காட் எதிரே ஞாயிற்றுக்கிழமை காரும் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 20க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கார் உளுந்தூர்பேட்டைக்கு அருகே உள்ள ஆசனூர் பகுதியில், அதிவேகமாக வந்த சுற்றுலாப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் காரில் பயணம் செய்த அழகுராசுவின் மனைவி ஜெயா மற்றும் மூத்த மகள் வசந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் அழகுராசு மற்றும் அவரது இளைய மகள் வைதேகி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். கார் மீது மோதிய வேகத்தில் சுற்றுலாப் பேருந்து அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.