சென்னை: செந்தில் பாலாஜி கைது செய்த பிறகும் அமைச்சராக தொடர்வது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவரது பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜனவரி 31 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2வது முறையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஜனவரி 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
பின்னர் பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடைநிலை ஊழியர் கைதானால் 48 மணி நேரத்தில் இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஆனால் கைதாகி 230 நாள் ஆகியும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? என்று கேட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“சட்டம் என்பது அனைவருக்கும் சமம்,” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி பிணை மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.

