சென்னை: பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்திற்கு வருகையளிக்கவிருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக அவர் பிப்ரவரி 18ஆம் தேதி வருகிறார்.
அண்மையில் தமிழகம் வந்த திரு மோடி, சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார். திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், ராமநாதபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ‘‘என் மண் என் மக்கள்’‘ என்ற பாதயாத்திரையைக் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி துவங்கினார்.
இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் துவக்கி வைத்தார். பின்னர் அண்ணாமலை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பாதயாத்திரை மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தின் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.