சென்னை: தங்களிடம் வேலை பார்த்த பணிப்பெண்ணை எந்த வகையிலும் கொடுமைப்படுத்தவில்லை என திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகளான மெர்லினா தெரிவித்துள்ளார்.
மெர்லினாவும் அவரது கணவரும் திமுக எம்எல்ஏவின் மகனான ஆண்டோவும் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்திய வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.
இருவரும் பிணை வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இத்தம்பதியர் வீட்டில் தாம் பணிப்பெண்ணாக வேலை பார்த்தபோது அடித்து துன்புறுத்தப்பட்டதாக பட்டியலினத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் புகார் எழுப்பி உள்ளார்.
இளம்பெண் வெளியிட்ட காணொளி பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் எழுப்பியுள்ள நிலையில் ஆண்டோ, மெர்லினா தம்பதியர் கைதாகி உள்ளனர்.
இதையடுத்து இத்தம்பதியர் சார்பில் பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், பணிப்பெண்ணாக வந்த பெண்ணை தங்கள் குடும்ப உறுப்பினர் போலவே நடத்தியதாகவும் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்து கல்விக் கட்டணத்தையும்கூட செலுத்தி இருப்பதாகவும் பிணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.