சென்னை: தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளைக் குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேற்கொண்ட சோதனை நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று அதிகாலை ஐந்து மணி அளவில் தொடங்கிய இந்தச் சோதனை நடவடிக்கை பலமணி நேரம் நீடித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தமிழகத்தில் உள்ள சிலர் தொடர்பு வைத்திருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
குறிப்பாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் இருந்தும் விடுதலைப் புலிகளின் அமைப்பின் சில நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்து கொண்டும் நாம் தமிழர் கட்சி ஏராளமான பணம் திரட்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இவற்றின் அடிப்படையில் சென்னை, திருச்சி, கோவை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி விஷ்ணு பிரதாப் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதன் முடிவில் ஒரு கைப்பேசிக் கருவி, சில புத்தகங்களை அவர்கள் கைப்பற்றிச் சென்றதாக இந்து தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இவருக்கு இலங்கைத் தமிழர்களுடனும் தடைப்பட்ட இயக்கங்களுடனும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன், இடும்பாவனம் கார்த்திக் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவர்களில் சில நிர்வாகிகளுக்கு எதிர்வரும் 7ஆம் தேதி நேரில் முன்னிலையாக வேண்டும் என்று குறிப்பிட்டு என்ஐஏ அழைப்பாணை அனுப்பியுள்ளதாக ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி என்ஐஏ சோதனை, விசாரணை நடவடிக்கை மேற்கொண்டதாக நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவசர கதியில் நடத்தப்பட்ட சோதனையானது அப்பட்டமான சட்ட விதி மீறல் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியை அழிக்கும் நோக்கத்தில் பாஜக செயல்படுவதாகவும் விசாரணைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.