சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் நாட்டின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கு உரியவர்களை தொடர்ந்து கண்காணித்த பிறகே தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பிறகே அக்கட்சி நிர்வாகிகளை கைது செய்வது என முடிவானது. எனவே இந்த நடவடிக்கை தொடர்பில் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன.
“நாட்டுக்கு எதிரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விரைவில் கைதாவர். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நாட்டுக்கு எதிராகச் செயல்படுவதை தமிழக காவல்துறை கண்டுபிடிக்கவில்லை,” என்றார் அமைச்சர் முருகன்.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது மடிக்கணினிகள், 8 சிம் அட்டைகள், 7 கைப்பேசிக் கருவிகள், பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

