சிவகங்கை: சிறுவன் ஒருவன் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியதை அடுத்து, அவனது பெற்றோருக்கு ரூ.26,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பலர் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்வதாய் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு பொறுப்பின்றி வாகனங்களை ஓட்டினால் அவர்களது பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் பெற்றோர் மீது வழக்குப் பதிவாகும் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் சிவகங்கையில் 18 வயதிற்குட்பட்ட சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டியபோது காவல்துறையிடம் சிக்கினான்.
இதையடுத்து சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் பின்னர் அவர்கள் மீது வழக்கும் பதிவானது.
இவ்வழக்கை விசாரித்த காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் சிறுவனின் பெற்றோருக்கு 26,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன் சிறுவன் பயன்படுத்திய வாகனத்தின் பதிவையும் ஓராண்டு நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.