சென்னை: சட்ட விரோதமாக மணல் அள்ளிய விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மணல் குவாரி அதிபர்களின் 130 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மணல் குவாரி முறைகேடுகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அமலாக்கத்துறை கடந்த மாதம் 12ஆம் தேதி அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
மணல் குவாரி அதிபர்கள், சில தொழில் அதிபர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட ரூ.128 கோடி மதிப்பிலான 209 இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மூன்று மணல் குவாரி அதிபர்களின் 35 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த வங்கிக் கணக்குகளில் ரூ.2.25 கோடி பணம் இருந்தது. ஆக மொத்தம் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

