சென்னை: நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சு.வெங்கடேசன் பயணம் மேற்கொண்ட இண்டிகோ உள்நாட்டு விமானத்தில் “இராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பக்கம்” ஏரி என்று தமிழில் ஒரு குரல் ஒலித்தது. அது குறித்து பாராட்டி அவர் தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், உள்நாட்டு விமானத்தில் அவ்வப்பொழுது தமிழ் மொழியில் அறிவிப்பு செய்யப்படுவதைக் கேட்க முடியும். மதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் விமானியின் அறிவிப்பு வியப்பைத் தந்தது.
“இடது பக்கம் இருக்கும் பயணிகளின் பார்வைக்கு தெரிவது முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி” என்று ஒலித்தது அந்தக்குரல்.
“காற்றின் வேகத்தை, வெயிலின் அளவைத்தான் விமானிகள் சொல்வார்கள். ஆனால் ஏரியின் வரலாற்றை வானிலே ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
அந்த குரலுக்கு சொந்தக்காரரான விமானி வெங்கடேசை அழைத்து வாழ்த்துச் சொன்னேன். வேள்பாரி வாசகர் என்று தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டார். வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுடன் சு.வெங்கடேசன் விமானி வெங்கடேசுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.