சைதை துரைசாமி மகன் வெற்றியைத் தேடும் பணியைத் தொடர்வதில் சிக்கல்

இமாலச்சலப் பிரதேச ஆற்றில் பாய்ந்த கார்

சைதை துரைசாமி மகன் வெற்றியைத் தேடும் பணியைத் தொடர்வதில் சிக்கல்

2 mins read
0dec25c6-5223-45af-b565-78b5ae478587
வெற்றியின் கார் சட்லஜ் நதியில் விழுந்தது. அவரை மூன்று நாள்களாக மீட்புப் பணியினர் தேடி வருகின்றனர். - படம்: ஊடகம்

சென்னை: சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி, 45, சென்ற கார் இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் விழுந்தது.

அவரை மீட்புப் பணியினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மூன்று நாள்களாக மீட்புப் பணி மேற்கொண்டும் வெற்றியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடுமையான பனி மூட்டம், உறைபனி காரணமாக மீட்புப் பணியைத் தொடர்வதில் சிக்கல் நிலவுகிறது. எனவே தற்போது மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைதை துரைசாமி மகன் வெற்றி குறித்துத் தகவலறிய மேலும் இரண்டு நாள்கள் ஆகும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ரூ. 1 கோடி சன்மானம்

சட்லஜ் ஆற்றில் காணாமல் போன தனது மகன் வெற்றி துரைசாமி குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று சைதை துரைசாமி தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் போன தனது மகன் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்களிடம் வேதனையுடன் கேட்டுக்கொண்டிருக்கும் சைதை துரைசாமி, மகன் குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேச சுற்றுலாவை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவதற்காக அவர்கள் வாடகை கார் ஒன்றில் விமான நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கஷங் நாலா என்கிற மலைப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் தஞ்சினுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி 200 அடி பள்ளத்தில் ஓடிக் கொண்டிருந்த சட்லஜ் நதியில் விழுந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் காரையும் காரில் இருந்தவர்களையும் மீட்பதற்கு களம் இறங்கினார்கள். சட்லஜ் நதியில் மூழ்கியபடி கிடந்த காரை கயிறு கட்டி கரையோரமாக இழுத்தனர். அப்போது ஓட்டுநர் தஞ்சின் காருக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பள்ளத்தாக்குப் பகுதியில் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வெற்றியின் உதவியாளர் கோபிநாத்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காரில் பயணம் செய்த வெற்றியை காணவில்லை. சட்லஜ் நதியில் அவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுவினருடன் காவல்துறையும் இணைந்து காணாமல் போன வெற்றியைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

காட்டில் வாழும் உயிரினங்களைப் படம் எடுப்பதில் வெற்றி அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவ்வப்போது காடுகளுக்குச் சென்று, அங்கேயே தங்கி இருந்து படங்களை எடுத்து வருவது வழக்கம். அவர் எடுத்த படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார். அவர், இமாச்சலப் பிரதேச பகுதியில் வாழும் பனிக் கரடிகளின் வாழ்வியலைப் புகைப்படமாக பதிவு செய்யவே அங்கு சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கிரைம் திரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர், விபத்தில் மாயமாகி இருப்பது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாது திரைத் துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்