சென்னை: ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றிருந்தார்.
அங்கு தொழிலதிபர்கள், முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளை அவர் நேரில் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், பத்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை அவர் சென்னை திரும்பினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது பயணத்தின்போது ஸ்பெயின் முதலீட்டாளர்களுக்குத் தமிழகத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததாகக் குறிப்பிட்டார்.
ஸ்பெயின் நாட்டிலுள்ள முன்னணி முதலீட்டாளர்களை தாம் தனித்தனியாக நேரில் சந்தித்துப் பேசியதாகவும் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
“தமிழகத்திற்கு பல்வேறு பயனுள்ள முதலீடுகளை ஈர்த்துவிட்டு திரும்பி உள்ளேன்.
“தமிழ்நாடு தனிப்பாதையில் செல்வதாக நியூயார்க் டைம்ஸ் ஊடகத்தில் செய்தி வந்திருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். அது தமிழ்நாட்டின் வளர்ச்சியை எடுத்துரைக்கிறது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதையடுத்து, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி,” என்றார்.