சென்னை: வீட்டுப் பணிப்பெண்ணைத் துன்புறுத்திய வழக்கு தொடர்பில் திமுக எம்எல்ஏவின் மகனும் மருமகளும் தாக்கல் செய்த பிணை மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
வீட்டில் பணியாற்றிய பெண்ணை சரமாரியாகத் தாக்கியதுடன், சாதிப் பெயரைச் சொல்லி வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் இருவரும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி உள்ளனர்.
இருவரது பிணை மனு மீதான விசாரணையின்போது, பணிப்பெண்ணின் கல்விக்காக மனுதாரர்கள் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் எம்எல்ஏ மகன் என்பதாலும் சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவும் இந்த வழக்கில் காவல்துறை அவசர கதியில் செயல்பட்டுள்ளதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் பணிப்பெண்ணைத் துன்புறுத்தியவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் உள்ளனர் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மனுதாரர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
விசாரணையை முடிக்க புலனாய்வு அதிகாரிக்கு போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களை பிணையில் விடுவிக்கும் பட்சத்தில் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளதால் பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் நீதிபதி மேலும் குறிப்பிட்டார்.