சென்னை: தமிழகத்தில் தொழில்துறை வரலாறு காணா வளர்ச்சியைக் கண்டு வருவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றிருந்த அவர், சென்னை திரும்பியதும் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய முதலீடுகளின் மூலம் தமிழகத்தில் உயர்தர அளவிலான பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
“முதல்வர் ஜப்பான் சென்று வந்தவுடன், ஜப்பான் நிறுவனம் ஒன்று தமிழகத்தில் பணியைத் துவங்கிவிட்டது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் பல திட்டங்கள் இந்த மாதமே துவங்க உள்ளன,” என்றார் அமைச்சர் ராஜா.
படித்த இளையர்களுக்கு, தமிழக அரசு ஏற்கெனவே ‘நான் முதல்வன்’ திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது என்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறும் இளையர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளிவரும் என்றும் அமைச்சர் ராஜா மேலும் தெரிவித்தார்.