மதுரை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளை மதுரையில் சந்தித்து ஓ. பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பன்னீர் செல்வம், “அதிமுக கொடியை நான் பயன்படுத்தக்கூடாது என்றுதான் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் அனைவரும் அதிமுக கொடியையே பயன்படுத்தியுள்ளார்கள். அதிமுக என்பது எனது ரத்தம். அதை மாற்றுவதற்கு தீர்ப்பு வழங்கமுடியாது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறப்பாக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டுள்ளது. மீண்டும் மோடிதான் பிரதமர் ஆவார். ஏற்கெனவே நாங்கள் பாஜகவின் கூட்டணியில் செயல்பட்டுள்ளோம்.
வரும் மக்களவைத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடப் போவதில்லை. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார் பன்னீர்செல்வம்.
மேலும், பன்னீர்செல்வம் பேசுகையில், “ஈரோடு இடைத்தேர்தலில் தற்காலிகமாகதான் இரட்டை இலைச் சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பெற்றுள்ளது. அதிமுக கொடிக்கு மீண்டும் நாங்கள் உரிமை கோருவோம். இரட்டை இலைச் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

