சென்னை: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரைக் கண்டுபிடிக்க ‘இன்டர்போல்’ எனப்படும் அனைத்துலக காவல்துறையின் உதவியை நாட உள்ளதாக தமிழகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வியாழக்கிழமை அன்று சென்னையில் உள்ள 13 பள்ளி களுக்கு அடையாளம் தெரியாத சிலர் அடுத்தடுத்து மின்னஞ்சல் வழி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பெரும் பதற்றம் நிலவியது.
வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு மிரட்டலுக்குள்ளான பள்ளிகளில் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது.
இதையடுத்து, சென்னையில் உள்ள பள்ளிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என காவல்துறை தெரிவித்தது.
மேலும், மிரட்டல் விடுத்தவர்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
மத்திய உள்துறை அமைச்சின் அனுமதியோடு ‘இன்டர்போல்’ உதவியை தமிழக அரசு நாட உள்ளது.