மதுரை: மத்திய அரசிடம் இருந்து நிவாரணம் கேட்கவில்லை என்றும் தமிழகத்துக்குரிய உரிமையைத் தர வேண்டும் என்றுதான் கேட்கிறோர் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மிச்சாங் புயலும் பெருமழையும் தமிழ்நாட்டின் இரண்டு முனைகளைப் புரட்டிப் போட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்துக்கு வாய் வார்த்தைகளைத் தவிர மத்திய அரசு வேறொன்றையும் வழங்கவில்லை என்று தனது சமூக ஊடகப்பதிவில் சாடியுள்ளார்.
“விவசாயம், வேலையிழப்பு, கால்நடைகள் இறப்பு, வாழ்விட இழப்பு என உயிரைப் பிடுங்கிச் சென்றது அந்தப் பேரிடர்,” என்று தமது பதிவில் வேதனையுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மிச்சாங் புயல் காரணமாக தமிழகம் பெரும் சேதங்களைச் சந்தித்தது. பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
“வெள்ள சேதங்களைப் பார்வையிட மத்தியக் குழு வருகை தந்தபோது தமிழக அரசு அதிகாரிகள் புயல் வெள்ள பாதிப்புகளைத் தெளிவாக எடுத்துரைத்தும் மத்திய அரசு உரிய நிதியை வழங்கவில்லை.
“மத்திய அமைச்சர்கள் சிலரும் தமிழகத்துக்கு அச்சமயம் வருகை தந்தனர். எனினும், தமிழக அரசு கேட்ட நிதியுதவி முழுமையாகக் கிடைக்கவில்லை. மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது,” என திமுக சாடியுள்ளது.