திருச்சுழி: திருச்சுழி அருகே 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். பரளச்சி புரசலூர் என்ற கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வின்போது இச்சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
“சிற்பத்தின் வடிவமைப்பைப் பார்க்கும்போது, 1,000 ஆண்டு களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.
“பொதுவாக தவ்வை என்பவர் மூதேவி என அழைக்கப்படுகிறார். இவர், முற்கால பெண் தெய்வ வழிபாடுகளில் சிறந்து விளங்கியுள்ளார். இவரது வழிபாட்டு இடங்கள் பெரும்பாலும் நீர்நிலை அருகே இருக்கும். இதை வைத்துப் பார்ர்க்கும்போது தவ்வை சிற்பங்கள் இருக்கும் ஊர்கள் விவசாயத்திலும் வளமையிலும் சிறந்து விளங்குவதை பார்க்கலாம். இவர் விவசாயத்திற்கும் பிள்ளைப் பேற்றுக்குமான கடவுளாகப் பார்க்கப்படுகிறார்,” என்று ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஏதோ காரணத்தால் தவ்வை வழிபாடு கைவிடப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் தொடர்ந்து கிடைத்து வரும் சிற்பங்கள் வாயிலாக தவ்வை வழிபாடு குறித்து மேலும் பல தகவல்களை அறிய முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.