சென்னை: தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி பிப்ரவரி 12ஆம் தேதி காலை, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்காமல் அதைப் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசாங்கம் தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும் என்பதே மரபு.
ஆனால் ஆளுநர் ரவி அவ்வாறு செய்யாதது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் ஆளுநர் ரவி பேசத் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அதையடுத்து, ஆளுநர் ரவி உரையாற்றத் தொடங்கினார்.
ஒரு திருக்குறளை வாசித்துவிட்டு பேசத் தொடங்கினார்.
“இந்த அவையில் முதலிலும் இறுதியிலும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதைக் கடைப்பிடிக்கவில்லை. எனக்குத் தயாரித்துத் தரப்பட்டுள்ள உரையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் ஏற்புடையதாக இல்லை.
“எனவே, உரையை வாசிக்க எனக்கு விருப்பமில்லை. தமிழக அரசு தயாரித்த உரையின் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்க முடியவில்லை,” என்று ஆளுநர் ரவி தெரிவித்தார்.
இவ்வாறு கூறிவிட்டு தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்காமல், “வாழ்க தமிழ்நாடு! வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்! ஜெய் பாரத்! என்று கூறி தமது உரையை நான்கு நிமிடங்களுக்குள் முடித்துக்கொண்டார்.
தமிழக அரசாங்கத்தின் உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்தது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக வாசிக்காமல் தமிழக ஆளுநர் அதைப் புறக்கணித்து சட்டமன்றத்தில் அமர்ந்து இருந்தது தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை.