சென்னை: தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அநாகரிகமான முறையில் ஆளுநரை தாக்கிப் பேசியதன் காரணமாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அங்கிருந்து வெளிநடப்பு செய்ததாக தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
“ஆளுநரின் உரையின் வரைவு அறிக்கையை, தமிழக அரசிடமிருந்து பிப்ரவரி 9ஆம் தேதி தமிழக ஆளுநர் மாளிகை பெற்றது. அதில், உண்மையற்ற பல விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனால், அதனை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். அப்போது, ஆளுநர் உரையில் என்னென்ன விவரங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனையை ஆளுநர் வழங்கினார்.
“சட்டமன்றத்தில் முதலில் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, கடந்த காலங்களில் முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார்.
“இரண்டாவதாக, ஆளுநரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். சட்டமன்றம் கூட்டப்பட்டதற்கான காரணங்களைப் பேரவைக்குத் தெரிவிக்க வேண்டும். தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும் அப்பட்டமான அரசியல் கருத்துகளை வெளியிடுவதற்குமான மன்றமாக இருக்கக்கூடாது.
“ஆளுநர் ரவி இவ்வாறு ஆலோசனை அளித்திருந்தும், அவரது ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்தது. இந்நிலையில், ஆளுநர் இந்திய நேரப்படி பிப்ரவரி 12ஆம் தேதி காலை 10 மணியளவில் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில், சபாநாயகர், முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திருவள்ளுவரின் 738வது குறளுடன் முதல் பத்தியை வாசித்தார். அதன்பிறகு தவறான தகவல்கள் மற்றும் கூற்றுகளுடன் ஏராளமான பத்திகள் இருந்ததால் அரசமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு ஆளுநர் உரையை வாசிக்க தன்னால் இயலவில்லை என்று ஆளுநர் கூறினார். மேலும், தமிழக மக்களின் நலனுக்காக இந்தச் சட்டமன்ற அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துவதாகவும் கூறி ஆளுநர் தனது உரையை முடித்துக்கொண்டார்.
“ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அய்யாவு வாசித்தார். சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை ஆளுநர் அவையில் அமர்ந்திருந்தார். சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி தேசிய கீதத்துக்காக ஆளுநர் எழுந்தார். இருப்பினும், சபாநாயகர் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நிரல்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆளுநருக்கு எதிராக அவதூறாகப் பேசினார். நாதுராம் கோட்சே மற்றும் பலரை ஆளுநர் பின்பற்றுவதாக சபாநாயகர் கூறினார். சபாநாயகர் தனது அநாகரிகமான நடத்தையினால், சபையின் கௌரவத்தையும் தமக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்கு இருக்கும் கௌரவத்தையும் இழிவுப்படுத்தினார். சபாநாயகர், ஆளுநரைக் கடுமையாகத் தாக்கியபோது, ஆளுநர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில்கொண்டு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார்” என்று தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவின் தென் மாநிலங்களின் ஆளுநர்களுக்கு எதிராக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
“தென் மாநில ஆளுநர்களின் திருவிளையாடல் எல்லாம் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆளுநர்கள் ஜனநாயகத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

