சென்னை: சட்லஜ் நதியில் இருந்து மீட்கப்பட்டுள்ள சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் நேற்று செவ்வாய்க்கிழமை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலிக்குப் பிறகு மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானபூமியில் தகனம் செய்யப்படும் என்று மனித நேய அறக்கட்டளை அறிவித்திருந்தது.
இந்நிலையில், வெற்றியின் உடலை மீட்ட சுந்தர் நகர் டைவர்ஸ் யூனியனைச் சேர்ந்த ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்கு தான் அறிவித்தபடி ஒரு கோடி ரூபாயை வழங்க உள்ளதாக சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அவரது கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
ஆனால், வெற்றி துரைசாமியைக் கண்டுபிடிக்க முடியாததால், தனது மகனைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக சைதை துரைசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் விபத்து நடந்த எட்டு நாள்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மீட்கப்பட்டது.
பாறையின் அடியில் சிக்கியிருந்த நிலையில், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.