சென்னை: இன்று உலகெங்கும் அன்பர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் சென்னையில் உள்ள மெரினா, எலியட்ஸ் கடற்கரைகள், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அன்பர்கள் அதிக அளவில் கூடுவர்.
குறிப்பாக, மெரினா கடற்கரையில் காதலர்களின் வருகை மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் இங்கு காவலர்களின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மெரினாவில் அத்துமீறும் காதல் ஜோடிகளை கண்காணிக்க காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர்.
அத்துடன், காதலர் தினத்தைக் கலாசார சீர்கேடு என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சிலர், காதல் ஜோடிகளை மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுபோல் மிரட்டுபவர்களைக் கண்டால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க காவலர்களுக்கு உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும், 16 வயதுடைய காதல் ஜோடிகளைக் கண்காணித்து அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காகப் பாதுகாப்புப் பணியில் அதிக அளவில் பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.