சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தனது தாயை கவனித்துக்கொள்ள தன்னை இலங்கைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க் கிழமை (13 பிப்ரவரி) விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இலங்கை துணை தூதரகம் அனுப்பிய ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசு அனுப்பிய ஆவணம் வந்து சேரவில்லை என்றும் அவரை இலங்கை அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
இதையடுத்து சாந்தன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 29ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.