சென்னை: வீட்டு வசதி வாரியத்தின் இடத்தை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் காலஞ்சென்ற முதல்வர் மு.கருணாநிதியின் பாதுகாவலருக்கு வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கியது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது. இந்நிலையில் அமைச்சர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார். இதையடுத்து இந்த வழக்கை தாமே விசாரிப்பதாகவும் அவர் அறிவித்தார்.
அமைச்சர் ஐ.பெரியசாமியை விசாரிக்க ஆளுநரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை ஏன் முறையான அனுமதி பெறவில்லை? சிறப்பு நீதிமன்றமும் ஆளுநரிடம் அனுமதி பெறும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடவில்லை?, என்று விசாரணையின் போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.
அமைச்சராக இருப்பவர் நேர்மையாக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மேலும் கூறினார்.