சென்னை: இரு கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சென்னையின் புறநகர் பகுதியான பட்டரவாக்கத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
மோதலில் ஈடுபட்டவர்கள் மதுப்புட்டிகளை வீசி எறிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக காவல்துறை தெரிவித்தது.
மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
அன்பர்கள் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி அன்று திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலில் இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயணம் செய்தனர்.
பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே வந்தபோது திடீர் என இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. சில நிமிடங்களில் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.
ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்த நிலையில் சில மாணவர்கள் தங்கள் பைகளில் மறைத்து வைத்திருந்த குளிர்பான, மதுப்புட்டிகளை வீசி எறிந்தும் தாக்குதல் நடத்தினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் மூன்று மாணவர்களை மடக்கிப் பிடித்தனர். மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
சென்னைக் கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.