சென்னை: கடலுக்குள் மூழ்கி மிதந்தபடியே கதை எழுதி சாதித்துள்ளார் ஒரு மாற்றுத் திறனாளியான ராணிப்பேட்டையைச் சேர்ந்த மணி எழிலன்.
45 வயதான அவர் சாலை விபத்தில் சிக்கி தனது ஒரு காலை இழந்தவர். எனினும் தளராது பல்வேறு சாதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அரவிந்தன் என்பவரிடம் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியைக் கற்றார் மணி எழிலன். இந்நிலையில் ஏதேனும் மாறுபட்ட சாதனை புரிய வேண்டும் என்று விரும்பிய மணி எழிலன் கடலுக்குள் மூழ்கி கதை எழுதுவது என்ற முடிவை எடுத்துள்ளார். இதற்காக தண்ணீரில் பயன்படுத்தக்கூடிய பேனாவை வாங்கியுள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று சென்னை அருகே உள்ள நீலாங்கரை கடற்பகுதியில் தனது சாதனை முயற்சியைத் தொடங்கினார் மணி எழிலன். கரையில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் கடலுக்குள் நீந்திச் சென்ற அவர் அங்கு 60 அடி ஆழத்தில் தன்னிடமுள்ள சிறப்பு பேனாவைக் கொண்டு கதை எழுதியுள்ளார். பின்னர் ஒவ்வொரு பக்கமாக தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்ப அவர்கள் அவற்றை அச்சிட்டு சிறு நூலாகத் தயாரித்துள்ளனர்.
பின்னர் இந்த நூல் உடனடியாக மணி எழிலனிடம் வழங்கப்பட்டு அது கடலுக்கு அடியிலேயே வெளியிடப்பட்டது.
மேலும் தண்ணீரில் நனைந்தாலும் சேதமடையாத வெட்புக் என்ற காகிதம், பேனா ஆகியவை பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 16 பக்கங்கள் கொண்ட கதையை எழுதி முடிக்க மணிஎழிலனுக்கு 54 நிமிடங்கள் தேவைப்பட்டன. இந்தக் கதைக்கு ’மையம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார் அரவிந்தன்.
கடலுக்கு அடியில் யோகா, மிதிவண்டி ஓட்டியது, தேசியக்கொடியைப் பறக்கவிட்டது என ஏற்கெனவே பல்வேறு சாதனை களைப் படைத்துள்ளார் மணி எழிலன்.