சென்னை: தமிழக அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “சென்னையில் உள்ள முக்கிய நீர்வழிகளான அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் மற்றும் கொசஸ்தலையாறு ஆகியவற்றைச் சீரமைத்திட இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
“அதன் முதற்கட்டமாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரம், திருநீர்மலை, மணப்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை பகுதிகள் வழியாகப் பாய்ந்து, வங்கக்கடலில் கலக்கும் நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம், அரசு, தனியார் பங்களிப்புடன் சுமார் ரூ.1,500 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
“பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட இத்திட்டம் விரைவில் தொடங்கப்பட்டு 30 மாத காலகட்டத்தில் பணிகள் நிறைவு செய்யப்படும்.
“சைதாப்பேட்டை முதல் திருவிக பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்கு உள்ளாகவே இப்பணிகள் முடிக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.