தமிழ்நாடு மீள முடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வதை நோக்கி பயணிப்பதை 2024-25ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை உறுதி செய்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2024-25ஆம் ஆண்டின் நிறைவில் தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் மட்டும் ரூ.8,33,361 கோடியாக அதிகரிக்கும் என்பதும், ஓராண்டிற்கான வட்டியாக ரூ.63,722 கோடியாக செலுத்த வேண்டும் என்பதும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தின் பொருளியல் சீரழிந்து கொண்டே செல்கிறது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் அறிக்கையில் தென்படுகின்றன.
* 2023-24ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.37,540 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 2024-25ஆம் ஆண்டில் இது ரூ.18,588 கோடியாக குறைந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது இது ரூ.49,278 கோடியாக அதிகரித்திருக்கிறது.
* 2024-25 ஆம் ஆண்டில் தமிழக அரசு ரூ.49,638 கோடி கடனை அடைக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்கான நிதி தமிழக அரசிடம் இல்லாத நிலையில், ரூ.1,55,584 கோடி கடன் வாங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
* தமிழக அரசின் நேரடிக் கடனை, தமிழ்நாட்டின் மக்கள்தொகையான 7.65 கோடியுடன் பகிர்ந்தால் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடனாக வாங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதுவரை வாங்கிக் குவித்துள்ள கடனுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.63,722 கோடி வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் ரூ.175 கோடி வட்டி செலுத்த வேண்டியுள்ளது.
* 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.எஸ்.டி.பி) ரூ.32 லட்சத்து 928 கோடியாக இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ரூ.31.55 லட்சம் கோடியாக குறைந்து விட்டது. தமிழக பொருளியல் வீழ்ச்சியை இது காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய கொள்கைகளின் மூலம் தமிழகத்தின் உற்பத்தியை அதிகரித்தல், வரியில்லாத வருமானத்தை அதிகரித்தல், செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டு, முன்னேறுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.