சென்னை: தமிழக வரவுசெலவுத் திட்டத்தில் மக்களுக்கான புதிய திட்டமோ, பெரிய திட்டமோ இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் துறைகளுக்கு ஒதுக்கும் நிதிகளைப் போலவே இந்தாண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. திமுக ஆட்சி கடன் வாங்கித்தான் நடக்கிறது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாகத் தமிழகம் உள்ளது. அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அதிக வருமானம் வருகிறது. ஆனால், பெரிய திட்டங்களை அறிவிக்கவில்லை என்று அவர் கூறினார்.
மீண்டும் ஒரு முறை தமிழக மக்களை திமுக ஏமாற்றி இருக்கிறது என்று தமிழக வரவுசெலவுத் திட்டம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக வரவுசெலவுத் திட்டத்தில்அறிவித்திருந்த வெற்று அறிவிப்புகளையே இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவித்து, மீண்டும் ஒரு முறை தமிழக மக்களை ஏமாற்றி இருக்கிறது திமுக. ஆறுகள் மறுசீரமைப்பு, புதிய பேருந்துகள் என்பன போன்ற அறிவிப்புகள், ஆண்டுதோறும் பட்ஜெட் அறிக்கையில் மட்டுமே இடம்பெறும் அலங்கார வார்த்தைகள் ஆகிவிட்டனவே தவிர, கடந்த மூன்று ஆண்டுகளாக இவை எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களைச் செயல்படுத்த எந்த நிதியும் ஒதுக்கியதாகத் தெரியவில்லை.
மாறாக, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பல வீண் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களுக்குத் தேவையான திட்டங்கள் எதையும் புதிதாக அறிவிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.