சென்னை: உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாட்டில் அன்னைத் தமிழ் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் பயிற்று மொழி மட்டும் தான் என்றில்லாமல், கடைகளின் பெயர்ப்பலகைகள், உயர்நீதிமன்றம், திருமணங்கள், ஆலய வழிபாடு என எங்குமே அன்னைத் தமிழைக் காண முடியவில்லை.
இப்படியாக தமிழன்னைக்கு இழைக்கப்படும் அவமானத்தைத் துடைத்தொழிக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த ஆண்டு உலகத் தாய்மொழி நாளான 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் சென்னையில் தமிழன்னை சிலையுடன் ‘தமிழைத்தேடி’ என்ற தலைப்பில் பயணத்தைத் தொடங்கினேன்.
‘தமிழைத்தேடி’ பயணம் மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ளது. இந்நிலையில், அன்னைத் தமிழ் சார்ந்த கோரிக்கைகள் அனைத்தும் இன்னும் கோரிக்கைகளாகவே தொடர்கின்றன.
பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் மொழியைக் கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும், தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை பட்ட மேற்படிப்பு வரை நீட்டிக்க வேண்டும், தமிழைக் காக்க மொழிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் அமைக்கப்பட வேண்டும், செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை மேம்படுத்த வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு தமிழ்ப் பாட மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பனபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் என கடந்த ஓராண்டில் பலமுறை பாமக வலியுறுத்திய போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.