சென்னை: காலஞ்சென்ற ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று (பிப்ரவரி 24) அவரது நெருங்கிய தோழியான சசிகலா புது வீட்டில் குடியேற உள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள சசிகலாவுக்கு நெருக்கமான ஆயிரம் பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ‘ஏசியாநெட் தமிழ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் முடிந்த பின்னர் வெளிவந்த சசிகலா இன்னும் தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை. ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகளாக வசித்த போயஸ் தோட்டத்தில் புது வீடு கட்டுவதில் முனைப்பு காட்டி வந்தார்.
கடந்த ஜனவரி 24ஆம் தேதி புது வீட்டுக்கு கிரகப்பிரவேசம் நடந்தேறியது. எனினும் அந்த வீட்டில் அவர் வசிக்கவில்லை எனத் தெரிகிறது. ஒரு மாதம் காத்திருந்து அந்த வீட்டில் குடியேற உள்ளார்.
இந்நிலையில், சென்னை தியாகராயநகர்ப் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வரும் சசிகலா, ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி புது வீட்டில் குடியேற முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
புது வீட்டில் இருந்தபடி தனது அரசியல் நடவடிக்கைகளை முழு வேகத்தில் தொடங்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.