சிவகங்கை: வயல்வெளிகளில் குச்சிகளில் பாட்டில்களைக் கட்டி வைத்து நெற்பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விவசாயிகள் நூதனமான முறையில் விரட்டி வருகின்றனர்.
சிவகங்கை அருகே மாங்குடி, வைரவன்பட்டி, பெரியகோட்டை, தெக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏறக்குறைய 1,000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், காட்டுப்பன்றிகள் அவற்றை அதிகம் சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த அங்கு வசிக்கும் விவசாயிகள் விதவிதமான யுக்திகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
எனினும், நள்ளிரவில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக நெல் வயல்களில் இறங்கி நெற்பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இந்நிலையில் பெரியகோட்டை தெக்கூர் பகுதியில் நெல் வயல்களின் வரப்புகளில் சிறிய குச்சிகளை ஊன்றி அதில் சில பாட்டில்களைக் கட்டி வைத்து அது ஒன்றோடு ஒன்று உரசும் போது ஏற்படும் சத்தம் மூலம் காட்டுப்பன்றிகளை விரட்டும் புதிய யுக்தியை விவசாயிகள் கடைப்பிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி ரமேஷ் கூறுகையில், “காட்டுப் பன்றிகளை விரட்ட நாங்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம். வயல்களில் சிறிய குச்சிகளில் வெள்ளை நிற சாக்குகளைக் கட்டி வைத்துள்ளோம். வயல் முழுவதும் சேலைகளைக் கட்டி வைத்துள்ளோம். சில சமயங்களில் வெடிவைத்து விரட்டியும் சத்தம் எழுப்பியும் காட்டுப் பன்றிகளை விரட்டுகிறோம்.
“குச்சிகளில் பாட்டில்களைக் கட்டி வைத்து அது ஒன்றோடு ஒன்று உரசும் சத்தத்தைக் கேட்டு காட்டுப் பன்றிகள் ஓடிவிடும் என்ற புது முயற்சியில் இப்போது இறங்கியுள்ளோம். இதனால் ஓரளவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது,” என்கிறார்.